Monday, July 6, 2026 7:13 am
“இது எனது கடைசி உலகக்கிண்ணப் போட்டியாக இருக்கும், ஆனால் நாளை எனது கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புவோம்,” என்று ஸ்பெயினுக்கு எதிரான 16-வது சுற்றுப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ரொனால்டோ கூறினார். “எனக்கு இது ஒரு மோசமான உலகக் கிண்ணப் போட்டியாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. நான் ஏற்கனவே மூன்று கோல்களை அடித்துள்ளேன். நாளை இன்னொரு கோல் அடிக்க முடியுமா என்று பார்ப்போம் “என்று போத்துகல் அணியின் கப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
41 வயதான இவர், குழுச் சுற்றில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்தார், 32-வது சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக ஒரு பெனால்டியை கோலாக மாற்றினார், இது அவரது முதல் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்று கோலாகும்.
2006 ஆம் ஆண்டு ஜேர்மனியில் அறிமுகமானதிலிருந்து, அவர் தொடர்ச்சியாக ஆறு உலகக் கிண்ணப் போட்டில் கோல் அடித்துள்ளார். மேலும், 11 உலகக் கிண்ணக் கோல்களுடன், தொடர்ச்சியாக ஆறு தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
போத்துகல் அணிக்காக ரொனால்டோ 232 போட்டிகளில் விளையாடி, 146 சர்வதேச கோல்களை அடித்துள்ளார். யூரோ 2016-ல் தனது நாட்டிற்கு முதல் பெரிய பட்டத்தை வென்று கொடுத்த அவர், பின்னர் 2019, 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணங்களையும் வென்றார்.

