Thursday, June 4, 2026 4:02 pm
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் வரை இருந்துள்ளனர். அவர்களில் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தற்போது தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீயில் கருகிய 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று காலை நடத்தப்பட்டதை அடுத்து சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

