Friday, January 23, 2026 11:37 am
வைத்தியர் போல உடையணிந்து, புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வைத்தியரின் வீட்டில் நடத்தி வந்த கிளினிக் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவர் அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய அடையாள அட்டைகள் இல்லாமல் வைத்தியராக செயற்பட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலி வைத்தியராக செயற்பட்டு வந்த 33 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்த மருந்து பொருட்களான சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

