Friday, January 9, 2026 3:30 pm
“டித்வா” புயலினால் நாட்டில் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 – 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன. எனவே ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது.
2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் “எமக்கு ஒரு வீடு” திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும் தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த போதும் இன்னும் பலர் வீடுகள் இன்றி வசித்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும் மலையக தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 20 இலட்சம் ரூபாயும் அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து தலா 15 இலட்சம் ரூபாய் வீதம் இரு தவணைகளாக மீதித் தொகை வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும்.
இன்றைய நிகழ்வில் அடையாள ரீதியாக 26 பயனாளிகளுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதிக்கான ஆவணங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். ஏனைய பயனாளிகளுக்கும் இந்த நிதி விரைவாகக் கிடைக்கப்பெறும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.


