கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான இலக்கு 3.7 பில்லியன் டொலரை எட்டும் என அவர் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா சீதை அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்தார்.
“இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் தான் அதிக அளவில் உள்ளனர். பலர் மத ரீதியாக சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கோனேஸ்வர ஆலயம், கதிர்காமம் போன்ற பல்வேறு இடங்களைக் காண ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய பலம்.
நாம் பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறோம். 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே வந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் நாங்கள் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்காக பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.