வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
உகந்தை மலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்று மக்கள் கவலை தெரிவித்தததுடன் கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்றத் திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் அவர்கள் அஞ்சுகின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பாக இந்து மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடமும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
உகந்தைமலை வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு கிழக்கு முன்னாள் ஆளுநர், அமைச்சர்கள், ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகின்றது.இந்நிலையில், அதே சூழலில் உள்ள மற்றுமொரு மலையில் புத்தர் சலை வைக்கப்பட்டிருப்பது இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து உரிய, நீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.