உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மக்களும், வேட்பாளர்களும் அதிக ஆர்வம் காஅட்டவில்லை. பிரசாரங்களும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக ஜனநாயக சீர்திருத்தங்கள், தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் ஆணைக்குழுவினால் அமைதிக்காலம் அறிவிக்கப்பட்டாலும் சிலர் இறுதி நேரத்தில் கூட சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் ஊடாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பர்.
அல்லது அரசியல் கட்சிகளால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடும். தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெறுபவர்களுக்கு இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் பாதகமாக அமையக் கூடும்.
எனவே அமைதி காலத்தில் எந்த வகையிலும் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் ஏழாவது சந்தர்ப்பம் இதுவாகும். எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மந்தமான ஒரு நிலைவரத்தையே காண்பிக்கிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தேர்தல் அதிக நேரத்தை நீதிமன்றங்களிலேயே செலவிடப்பட்ட ஒன்றாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பெருமளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் சில சிக்கலான நிலைமைகளும் ஏற்பட்டன. இவை தொடர்பில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையால் அரசியல் கட்சிகளும் விளிம்பிலேயே நின்று கொண்டிருந்தன.
339 உள்ளூராட்சிமன்றங்களில் 114 உள்ளூராட்சிமன்றங்களில் மாத்திரமே ஒரு வேட்புமனு கூட நிராகரிக்கப்படவில்லை.
இது ஒரு வகையில் சவால் மிக்கதொரு நிலைமையாகும். இதனால் கட்சிகளும் வேட்பாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டதால் பிரசாரங்களும் மந்த கதியிலேயே இடம்பெற்றன.
2010ஆம் ஆண்டிலிருந்து மதிப்பிடும் போது இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலே மிகக் குறைந்தளவான செலவில் நடத்தப்படும் தேர்தலாகவும் காணப்படுகிறது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் மிகக் குறைந்தளவிலேயே விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மீதான ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இம்முறை சுமார் 70,000 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இவர்களில் சுமார் 10,000 பேர் மாத்திரமே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக எமது மதிப்பீட்டில் இனங்காணப்பட்டுள்ளது.
49 அரசியல் கட்சிகளும், 75 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள போதிலும், 3 பிரதான கட்சிகள் மாத்திரமே நேரடி பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணைக்குழு பாரியதொரு தொகையை செலவிட்டிருக்கின்றது.
வேட்பாளர்கள் அதற்கு சமமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கின்றனர். நேரடியாக அரசியலிலோ பிரசார நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பதென்றால் வேட்புமனு தாக்கல் செய்யாதிருப்பதே உசிதமானதாகும்.
எவ்வாறிருப்பினும் ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளன. பொது சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதும் குறைவடைந்துள்ளது என்றார்.