Saturday, May 16, 2026 9:13 pm
புகையிலைப் பயன்பாட்டையும் புகைப்பிடித்தலையும் குறைப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, இலங்கை பல்கலைக்கழகங்கள், சுகாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் , உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.
பிரதி சுகாதார அமைச்சர் ஹனசக விஜேமுனியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், ஊடக சந்திப்பு, இலங்கையில் புகைப்பிடிப்பதை நிறுத்தும் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான உத்திகள் மீது கவனம் செலுத்தியது.
ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை வயம்பப் பல்கலைக்கழகம் , ஜெனரல் சர் யோவான் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இலங்கை பல்கலைக்கழகங்களின் பங்கேற்புடன், “ரெஸ்பையர்” என்ற உலகளாவிய சுகாதார முன்னெடுப்பின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹனசக விஜேமுனி, புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பது ஒரு சுகாதார நோக்கம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அபிவிருத்தி முன்னுரிமையும் ஆகும் என்று கூறினார். மேலும், புகையிலை தொடர்பான நோய்கள் இலங்கையின் சுகாதார அமைப்பு, பொருளாதாரம் மற்றும் குடும்பங்கள் மீது தொடர்ந்து பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் எச்சரித்தார்.
புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கான அறிவியல் மற்றும் ஆதார அடிப்படையிலான அணுகுமுறைகளையும் இந்த நிகழ்வு முன்னிலைப்படுத்தியதுடன், எதிர்கால சந்ததியினரை புகையிலைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்க, வலுவான புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் அவசியத்தையும் வல்லுநர்கள் வலியுறுத்தினர்.

