நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை. வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை.
இதய நோய் , உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம்” என்றார்.