யாழ்ப்பாண மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் விவேகானந்தராஜா மதிவதனியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாரும் போட்டியிட்டனர்.விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். துணை மேயராக இம்மானுவேல் தயாளன் தெரிவு செய்யப்பட்டார்.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ்ப்பாண மாநகரசபையில் தமிழ் அரசுக்கட்சிக்கு 13 ஆசனங்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு 12 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு 10 ஆசனங்களும் உள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ,ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பகிரங்க வாக்கெடுப்பு மூலம் மேயர் தெரிவு நடைபெற்றது. ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதிவதனி விவேகானந்தராஜாவிற்கு வாக்களித்தனர்.
