செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.