உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 73 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் , சிகிச்சையின் பின்னர் 68 மாணவர்கள் வீடு சென்றுள்ளதாகவும்,ஐந்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்ஜனி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியனவற்றிலிருந்து உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
திடீரென ஏற்பட்ட வாந்தி , வயற்றுவலி காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஒரு உணவு விநியோகஸ்தரே உணவினை தயாரித்துவழங்குவதாகவும் அவரின் உணவு தயாரிப்பு இடத்திற்கு சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
உணவு மாதிரிகள் பகுப்பாய்வு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.