Friday, May 29, 2026 10:47 am
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலாவின் தயவால் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதைத் தொடர்ந்து 2011ம் வருடம் முதல் நேற்று வரை கடந்த 15 வருடங்களாக அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு தரப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில்தான் குடியிருந்தார்.
2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். அப்போது, அந்த வீட்டை அவர் காலி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த வீட்டிலேயே நான் தங்கிக் கொள்கிறேன் என அவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததார். ஸ்டாலினும் அதற்கு சம்மதித்ததால் அந்த வீட்டிலேயே பழனிச்சாமி தங்கியிருந்தார். அங்கேதான் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களை சந்திப்பது என அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது. இதனால், எதிர்க்கட்சியாக கூட அமர முடியவில்லை. ஒருபக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் தவெக பக்கம் சென்றுவிட்டனர். சிவி சண்முகம் முரண்டு பிடித்து வருவதால் அதிமுகவில் உட்கட்சி பூசலும் எழுந்துள்ளது. இந்நிலையில்தான் 15 வருடமாக தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு வீட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை பால் காய்ச்சி குடியேறியிருக்கிறார்.
திமுக ஆட்சியாக இருந்தால் கூட அவர்களிடம் பேசி இந்த வீட்டிலேயே பழனிச்சாமி குடியிருந்திருப்பார். தற்போது ஆட்சி மாறிவிட்டது. அதே வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி குடியிருக்க தவெக அரசு சம்மதிக்குமா என்பது சந்தேகம்தான். அதனால்தான் பழனிச்சாமி வீடு மாறிவிட்டார் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

