Friday, May 22, 2026 1:12 pm
மஸ்கெலியா பகுதியில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனையின் போது , தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் 30 நாட்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட முதன்மை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆபத்தான மேலதிக அலங்காரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உடனடியாக அகற்றுமாறும் சாரதிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட முதன்மை மோட்டார் வாகன பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், ஹட்டன் பிரிவு போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மஸ்கெலியா காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இன்று இந்த கூட்டுச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.
மஸ்கெலியா – ஸ்ரீபாத வீதி , மஸ்கெலியா – ஹட்டன் வீதி , மஸ்கெலியா – சாமிமலை வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்வீதிகளில் இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்துகள், கெப் ரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 40 வாகனங்கள் இதன்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களில் 28 வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
வாகனங்களின் அசல் கட்டமைப்பை (Original structure) சட்டவிரோதமாக மாற்றி அமைத்திருந்தமை ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களில் கூடுதல் பாகங்களை (Extra Parts) பொருத்தியிருந்தமை , மற்றும் வாகனங்களின் பிரேக் கட்டமைப்பு (Break System) முறையாக இயங்காமல் இருந்தமை ஆகியவையாகும்.
தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட இந்த வாகனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடுத்த 30 நாட்களுக்குள் அவை முழுமையாக பழுதுபார்க்கப்பட வேண்டும். அவ்வாறு பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை, அந்த வாகனங்களின் வருமான வரி அனுமதிப்பத்திரங்கள் (Revenue licenses) முதன்மை மோட்டார் வாகன பரிசோதகரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

