உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.
இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது. மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க், இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.