ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.வெசாக் பௌர்னமி தினத்தன்று இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையிலிருந்து 38 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 36 கைதிகளும், மஹர சிறைச்சாலையிலிருந்து 30 கைதிகளும் உள்ளடங்களாக 388 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
திங்கட்கிழமையும் (12), செவ்வாய்கிழமையும் (13) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கைதிகளை பார்ப்பதற்கும், அவர்களுக்கு வீடுகளில் சமைத்த உணவுகளையும் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. எனினும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எவற்றையும் வழங்க முடியாது.
இவை தவிர சிறைச்சாலைகளில் வெசாக் நிகழ்வுகளும் மத வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.