இலங்கை இரத்தினக்கல் , ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை. எனவே சர்வதேச இரத்தினக்கல் , ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் “Gem City Ratnapura- 2025” எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை (15), சனிக்கிழமை (16), ஞாயிற்றுக்கிழமை (17), ஆகிய மூன்று நாட்கள் பெல்மடுல்ல கிராண்ட் சில்வரே விடுதியில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2025-இன் தொடக்க விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா ,சீனா, சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அரசாங்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்திலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி இலங்கையை உலகின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையாக நிலைநிறுத்தும் நோக்குடன் பல்வேறு வகையான இரத்தினக்கற்கள் ஆபரணங்கள் அகழ்வு மற்றும் பதப்படுத்தும் முறைகள் ஆய்வக சேவைகள் களப்பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
GOV PAY வசதிகளுடன் கூடிய இலங்கையின் முதல் அரசுக்குச் சொந்தமான இரத்தினக்கல் வர்த்தக வலைத்தளமான gemcityratnapura.com அறிமுகப்படுத்தப்பட்டது.