இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (ODI) அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி ஆட்டத்தில், இடது கை பேட்ஸ்மேனான ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார்.
2013 ஆம் ஆண்டு இதே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அடித்த 52 பந்து சதத்தின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில், இந்திய அணி 413 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்தும்போது, மந்தனாவின் இந்த சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.
மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் இரண்டாவது அதிவேக சதம்
மிட்-விக்கெட் திசையில் ஒரு பிரமாண்டமான சிக்ஸர் அடித்து அவர் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இந்த சதம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை மட்டுமல்லாமல், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் என்ற பெருமையையும் அவருக்கு பெற்றுத் தந்தது.
இந்த சாதனை பட்டியலில் மெக் லானிங் 45 பந்துகளில் அடித்த சதம் மட்டுமே ஸ்மிருதி மந்தனாவை விட முன்னணியில் உள்ளது.
மந்தனா 67 பந்துகளில் 125 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரிகள் , 5 சிக்ஸர்கள் அடங்கும்.
கப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்து, மூன்றாவது விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் என்ற ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அவர் அமைத்தார்.