கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்து 111 பேர் காயமடைந்த சோகச் சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) செய்தியாளர் சந்திப்பில் மிகுந்த கவலை தெரிவித்தார்.
“கரூரில் நிகழ்ந்த துயரச் செய்தி ஆழ்ந்த மன வேதனையை அளிக்கிறது. அரசியல் நிகழ்வு என்றாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த எதிர்பாராத உயிர் இழப்புகளுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபா , சாதாரண காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
சம்பவம் நடந்த உடனேயே சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை உடனடியாகச் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் அனுப்பி, மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கூடுதலாக, இச்சம்பவம் குறித்துச் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சனைகளை உள்ளடக்கி, விரிவான நீதித்துறை விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை என்றும், ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
சம்பவ இடத்துக்கு சென்ற ஸ்டாலில் மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். விஜயைக் கைது செய்யும் படி பல தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.