ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட மா.குமார் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சன்முகநாதன் ஜெயந்தனும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமாரும் முன்மொழியப்பட்டனர்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் மா.குமார் ,தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரான சன்முகநாதன் ஜெயந்தனுக்கு வாக்களித்திருந்தார்.
பின்னர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் சென்று தான் தவறுதலாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து விட்டதாகவும் தனது வாக்கை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினருக்கு மாற்றுமாறும் கோரினார். எனினும் வாக்கு பதியப்பட்டுவிட்டதாகவும் அதனை மாற்ற முடியாது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தெரிவித்தார்.