மண்டைதீவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்து அதன் அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில் , அந்தவழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது,
இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என ஊர்காவற்துறை பொலிஸாரினால் மன்றில் தெரிவித்தமையை அடுத்து , வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , நவம்பர் 12 ஆம் திகதி வழக்கு விசாரனை நடைபெறும் என அறிவித்தார்.