சம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது கர்நாடகம் முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆர்சிபி வீரர்களை பாராட்டும் விதமாக சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவிற்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்தது.
இந்த பாராட்டு விழாவில் விராட் கோலி, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், குருணல் பாண்ட்யா உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருக்கும் நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி 11பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று அந்த மாநில பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நேற்று வெற்றி பெற்ற ஆர்சிபி அணியை பாராட்டும் விதமாக அவசரம், அவசரமாக நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில் முறையான ஏற்பாடுகளையும், ரசிகர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் அந்த மாநில அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
