தேர்தல் நிதிச் சதி வழக்கில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சர்கோசி தனது 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்திற்கு, அப்போதைய லிபியத் தலைவர் முகமது கடாபியின் அரசாங்கத்திடம் இருந்து சட்டவிரோதமாக நிதியைப் பெற சதி செய்ததாக நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் சர்கோசி சிறை செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
எனினும், உடனடியாக அவரை கைது செய்யாமல், சிறையில் அடைக்கும் திகதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜதந்திர சலுகைகளுக்கு ஈடாக, 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் தனது பிரசாரங்களுக்கு நிதியளிப்பதற்காக லிபியாவிடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாக சர்கோசி மீது குற்றம் சாட்டப்பட்டது.
சர்கோசியின் முன்னாள் அமைச்சர்களான கிளாட் குவென்ட் , பிரைஸ் ஹோர்டெஃபெக்ஸ் ஆகியோரும் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்காகக் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டனர்.
எனினும், நிழல் திட்டத்தின் ஒரு பகுதியை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தாலும், சர்கோசிக்கு எதிரான மற்ற மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.
பிரெஞ்சுச் சட்டத்தின்படி, பணம் செலுத்தப்படாவிட்டாலும் அல்லது நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட, ஊழல் நிறைந்த திட்டம் குற்றமாகவே கருதப்படும் என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.