Monday, February 9, 2026 7:56 am
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கெஸ் முகமதிக்கு ஈரான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. குற்றங்கள் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் சதி செய்வது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அவரது வழக்கறிஞர் முஸ்தபா நீலி சர்வதேச செய்தி நிறுவனமான AFPக்கு தெரிவித்தார். இது தவிர அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காகத் தனியாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
நாட்டை விட்டு வெளியேற இரண்டு ஆண்டுகள் தடையும் முகமதிக்கு விதிக்கப்பட்டுள்ளது. தென் கோராசன் மாகாணத்தில் உள்ள கோஸ்ஃப் நகருக்கு அவரை இரண்டு ஆண்டுகள் நாடுகடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீலி தெரிவித்தார். அதேநேரம் ஈரான் சட்டப்படி, இந்தச் சிறைத் தண்டனைகளை அனைத்தையும் அவர் ஒரே நேரத்தில் அனுபவிப்பார் என்பதால் அவர் 6 ஆண்டுகள் சிறையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் நர்கெஸ் முகமதி உடல்நிலை சிக்கல்களால் அவதிப்பட்டு வருகிறார். அதைக் கருத்தில் கொண்டு, சிகிச்சை பெறுவதற்காக நர்கெஸ் தற்காலிகமாக ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என வழக்கறிஞர் நீலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல என்றும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
53 வயதான நர்கெஸ் முகமதி, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானில் மரண தண்டனை மற்றும் பெண்களுக்குக் கட்டாய ஆடைக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார். இதற்காக அவர் பலமுறை விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான காலத்தை அவர் சிறையிலேயே கழித்துள்ளார். இதனால் 2015க்கு பிறகு அவர் தனது இரட்டைக் குழந்தைகளைக் கூட நேரில் பார்க்க முடியவில்லை. பாதுகாப்பு காரணங்களால் நர்கெஸின் இரட்டைக் குழந்தைகள் இப்போது பாரீஸில் வசிக்கிறார்கள். ஈரானில் மரண தண்டனைக்கு எதிரான அவரது தீவிரப் பிரச்சாரத்திற்காக, அவருக்கு 2023ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்ததால், அவருடைய குழந்தைகள் அந்த விருதைப் பெற்றுக்கொண்டனர். சிறையில் இருந்தபோதும், அவர் அமைதியாக இல்லை. சிறை வளாகத்தில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள், உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்.

