தமிழ் திரைப்பட நடிகர் ராஜே ர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பின்னாளில் துணை நடிகராகவும், தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது முக்கிய பங்களிப்பை வழங்கியவர். முதன் முதலில் தமிழ் திரையுலகில் 1978 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் 1979 ஆம் ஆண்டு கன்னிப்பருவத்திலே படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் இதுவரை தமிழில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் இவரின் திரைப்படங்கள் ரொமான்ஸ் , குடும்பக் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டிருந்தது. இதன் மூலம் இவரின் பண்பு மிக்க நடிப்பு, மென்மையான முகபாவனைகள், கலகலப்பான காதல் காட்சிகளில் அவர் காட்டிய பங்களிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று கூறலாம்.
முன்னணி இயக்குனர்களான பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரா போன்ற தலைசிறந்த இயக்குநர்களுடன் பணியாற்றினார். இவர் நடித்த திரைப்படங்களில் கதையின் உணர்ச்சி மையம் பெரும்பாலும் அவரது பண்பு மிக்க நடிப்பில்தான் இருந்தது. குறிப்பாக நெஞ்சத்தைக் கிள்ளாதே, அச்சமில்லை அச்சமில்லை, அந்த ஏழு நாட்கள், கடலோரக் கவிதைகள், மூடுபனி, கல்யாணராமன் ஆகிய படங்கள் முன்னணி படங்களாக பார்க்கப்படுகிறது. 90களுக்குப் பிறகு, அவருக்கு கதாநாயகன் வாய்ப்புகள் குறைந்தாலும், ராஜேஷ் முக்கியமான துணை நடிகராக பல திரைப்படங்களில் நடித்தார். அதேவேளையில், கோலங்கள், சித்தி,அண்ணாமலை, தென்றல் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் பங்கு பற்றினார். இவர் ஒரு நடிகர் மட்டும் இன்றி டப்பிங் ஆர்டிஸ்ட், எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர்.
நடிகர் ராஜேஷ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஆன்மீக உணர்வுள்ளவர். இதனால் தற்காலிகமாக சில ஆண்டுகளுக்கு சினிமாவை விட்டு விலகி ஆன்மீக பயணத்தில் நாட்டம் கொண்டார். இருப்பினும் சாமி, ரெட், ஆட்டோகிராப், சர்க்கார், உள்ளிட்ட ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் தனது பங்களிப்பை கொடுத்து வந்த நடிகர் ராஜேஷ்(75) சமீப காலமாக மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதியுற்று வந்த நிலையில், இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இவரின் இறப்பு செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.