போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில்காஸாவில் 60 நாள் காஸா போர் நிறுத்த திட்டத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் “இஸ்ரேல் ஆதரித்த ஒரு போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸுக்கு சமர்ப்பித்ததாக” வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
“இந்த முன்மொழிவு ஹமாஸுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே இஸ்ரேல் அதில் கையெழுத்திட்டது. அந்த விவாதங்கள் தொடர்கின்றன என்பதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும், மேலும் காசாவில் ஒரு போர்நிறுத்தம் ஏற்படும் என்றும், அதனால் அனைத்து பணயக்கைதிகளையும் வீட்டிற்குத் திருப்பி அனுப்ப முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று லீவிட் கூறினார்.
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் 60 நாள் போர் நிறுத்தம் மட்டுமல்லாமல், உயிருடன் உள்ள 10 பணயக்கைதிகளையும், இறந்த 18 பணயக்கைதிகளின் எச்சங்களையும் விடுவிக்கும் திட்டமும் உள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் வியாழக்கிழமை தனது தலைமை விட்காஃப்பிடமிருந்து மத்தியஸ்தர்கள் மூலம் புதிய காஸா போர் நிறுத்த திட்டத்தைப் பெற்றுள்ளதாகவும், அதைப் படித்து வருவதாகவும் கூறியது.