தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி வரையுள்ள பாக் சலசந்தி , மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ONGC நிறுவனத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 208 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல லட்சம் மீனவர்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பல லட்சம் கோடி அந்நிய செலாவணியையும், உள்நாட்டு செலாவணையையும் ஈட்டி தரும் மாவட்டமாக இராமநாதபுரம் திகழ்கிறது.
பல்வேறு காரணங்களால் கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித்தொழில் நலிந்து வருகிறது. மேலும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கேள்விகுறியாகிவருகிறது.
இச் சூழ்நிலையில் கடல் வளத்தை அழிக்கும் வகையில் பாக் சலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பய்ச்சுவது போல் உள்ளது . இது கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் செயல்.
கடலில் மீத்தேன் கிணறுகள் அமைப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பது குறித்து கருத்துக்கேட்கும் கூட்டங்களில் இராமநாதபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தற்போது தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மக்கள் விரோத செயலாகும். இதை உடனடியாக தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குறுகிய கடல் பகுதியான பாக் சலசந்தி கடல் பகுதியில் கடல் வளத்தை நம்பி இந்திய இலங்கை இருநாட்டு மீனவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இதுபோன்று இயற்கை சூழ்நிலைக்கு எதிரான நாசகார திட்டங்களால் இந்தப் பகுதி கடல் வளம் அழிய வாய்ப்புள்ளது. இதனால் இருநாட்டு மீனவர்களும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
அதேபோன்று *UNESCO-வால் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில், இது போன்ற நாசக்கார திட்டங்கள் அமைக்கும் பட்சத்தில் அந்தப் பகுதியில் உள்ள அரிதான உயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்