தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ,நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் திங்கள்கிழமை சென்னையில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்வில் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட நிகழ்வு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சீமான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் என்ற ஊகங்கள் எழுந்தன. அதற்கேற்றாற்போல இருவரும் ஒரே மேடையில் தோன்றியது மட்டுமின்றி, மாறி மாறி புகழாரம் சூட்டி கொண்டனர்.
குறிப்பாக, சீமான், “உலகம் முழுவதும் பயணிக்கும் பிரதமர் மோடி, ‘உலகின் முதல் மொழியான தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை’ எனக்கூறுகிறார்” எனக்கூறி பிரதமரை புகழ்ந்தார்.
அண்ணாமலையும், சீமானை ‘போர்க்களத்தில் தளபதி’ என கூறினார்
அதே போல அண்ணாமலை, சீமானை ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பார்ப்பதை விட, போர்க்களத்தில் தளபதியாக பார்ப்பதாக கூறினார்.
“காரணம் அவரது கொள்கை, அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதிபூண்ட கொள்கை, அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக போர் களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது” என்றார்.
அண்ணாமலை மேலும்,”எனக்கும் சீமான் எனும் தலைவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன்; அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். இது தான் நமது வித்தியாசம்” என்று சீமானை வாழ்த்தினார்.