மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகப் பிரச்சினைகள் உள்ள சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார கூறுகிறார்.
இதுபோன்ற பாதிப்புகள் உள்ள நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட குடும்பங்களை இலங்கை தூதரகம் கேட்டுக்கொள்கிறது என்று தூதர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்து தகாத நடத்தையை வெளிப்படுத்திய மேலும் இரண்டு இலங்கையர்கள் வியாழக்கிழமை (25) இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தூதர் நிமல் பண்டார, இரண்டு இலங்கையர்களும் மதியம் 12:40 மணிக்கு FLYDUBAI FZ 1636 விமானத்தில் துபாய் வழியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் நாடுகடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், ஒரு நபர் போதைப்பொருள் பாவனை காரணமாக வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்ததாகவும், இரண்டாவது நபர் மன அழுத்தம் காரணமாக தனது பணியிடத்தை விட்டுத் தப்பிச் சென்று இதேபோல் வேலை இல்லாமல் அலைந்து திரிந்ததாகவும் அவர் கூறினார். இருவரும் இஸ்ரேலில் உள்ள இலங்கை சமூகத்தினரால் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இரு நபர்களும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை இழந்ததால், தூதரகம் இரண்டு தற்காலிக பாஸ்போர்ட்டுகளை இலவசமாக வழங்கியதாக தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
அவர்கள் தற்காலிக தங்குமிடத்தில் இருந்தபோது தூதரகம் அவர்களின் நலனை உறுதிசெய்து, புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது என்று அவர் மேலும் கூறினார்.