Saturday, April 11, 2026 9:26 pm
அரை நூற்றாண்டிற்கும் மேலான நீண்ட இடைவெளிக்கு பிறகு, நிலவை நோக்கிய மனிதகுலத்தின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
நாஸாவின் ‘ஓரியன்’ விண்கலம், நான்கு விண்வெளி வீரர்களுடன் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக வந்து இறங்கியது. ஏப்ரல் 1-ஆம் தேதி புளோரிடாவிலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 10 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது.
கமாண்டர் ரீட் வைஸ்மேன் தலைமையில் விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் , கனடாவின் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இந்த பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் நிலவின் மறுபக்கத்தை மனித கண்களால் முதன்முறையாக நேரடியாக கண்டதுடன், விண்வெளியில் இருந்து முழு சூரிய கிரகணத்தையும் ஆவணப்படுத்தினர்.
பூமியிலிருந்து சுமார் 4,06,771 கிலோமீற்றர் தொலைவிற்கு சென்று, மனிதகுலம் விண்வெளியில் இதுவரை பயணம் செய்திராத அதிகபட்ச தொலைவு என்ற அப்பல்லோ 13-இன் சாதனையை முறியடித்தனர். வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஒலியை விட 33 மடங்கு வேகத்தில் பயணித்த விண்கலம், கடுமையான வெப்பத்தை தாங்கி பாதுகாப்பாக தரையிறங்கியது. நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான அடுத்தகட்ட முயற்சிக்கு இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

