ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிராம் விமானப்படை தளத்தை அமெரிக்காவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலிபான்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அவர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகியபோது, இந்த விமானப்படை தளம் கைவிடப்பட்டது.காபூலில் இருந்து 64 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாகிராம் விமானப்படை தளம், சீனாவிற்குச் சொந்தமான சின்ஜியாங் பகுதிக்கு அருகில் இருப்பதால், மூலோபாய ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இங்குதான் சீனாவின் அணு ஆயுத,ஏவுகணை வசதிகள் உள்ளன. இந்த விமானப்படை தளத்தின் கட்டுப்பாடு, சீனாவின் அணுசக்தி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், , ஈரானின் அணு ஆயுத திட்டங்களை கண்காணிக்கவும் அமெரிக்காவிற்கு உதவும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். .
இந்த கோரிக்கையை தலிபான் அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் சார்ந்திருக்கவில்லை என்றும், அமெரிக்காவுடன் பரஸ்பர மரியாதை அடிப்படையில் உறவுகளை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சீன வெளியுறவு அமைச்சும் , ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் அதன் மக்களின் கைகளில் இருக்க வேண்டும் என்றும், பிராந்தியத்தில் பதற்றத்தைத் தூண்டும் எந்த முயற்சியையும் ஆதரிக்காது என்றும் கூறியுள்ளது.