வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நடந்த மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர்.
முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார்.
அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை.
எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.