Friday, September 19, 2025 8:03 am
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று (19) உயிரிழந்தார்.
இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

