டெல்லியில் முஸ்தபாபாத் நகரில் இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் டெல்லி பொலிஸார் அடங்கிய குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் இடிந்து விழுந்த கட்டடத்தில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை.
கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.