“சுத்தமான இலங்கை” திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நவீன சுகாதார வசதிகளை நிறுவுவதற்கான தேசிய அளவிலான முயற்சியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
தூய்மையான இலங்கைக்கான ஜனாதிபதி பணிக்குழு, எரிசக்தி அமைச்சு ,முக்கிய எரிபொருள் வழங்குநர்களான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC), லங்கா ஐஓசி பிஎல்சி (LIOC), சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் , ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மூன்று வருட திட்டத்தின் கீழ், தீவு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 540 நவீன பொது சுகாதார வசதிகள் நிறுவப்படும்.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இவற்றில் குறைந்தது 100 வசதிகளாவது செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பயனர் நட்பு வசதிகளை வழங்கும்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்துப் பிரிவினருக்கும் அணுகக்கூடிய அத்தியாவசிய சுகாதார உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் எரிபொருள் நிலையங்களை சுத்தமான, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடங்களாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.