அட்டாளைச்சேனை பிரதேசபை அமைந்துள்ள புறத்தோட்ட பகுதியில் நேற்று (08) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 33 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.
அதிகாலை 2 மணியளவில் புறத்தோட்டம் பகுதிக்குள் மூன்று காட்டு யானைகள் உட்புகுந்து ஏ.ஆர். உபைதுல்லா என்பவரின் காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 33 பயன்தரும் தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்ட பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும், இதற்குப் பிரதான காரணம் பிரதேச சபையின் அருகில் உள்ள தனியார் காணியொன்றில் பிரதேச சபையால் தொடர்ச்சியாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதேயாகும் என பாதிக்கப்பட்ட தென்னம் தோட்ட உரிமையாளர் கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீண்ட காலமாக முன்வைத்துள்ள போதிலும், இதுவரை யானை வேலிகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.