Thursday, October 30, 2025 11:52 am
பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமானது அவுஸ்திரேலியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென் ஆஸ்டின் என்ற வீரர், மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தில் இருந்து வந்த பந்து, எதிர்பாராதவிதமாக பென்னின் கழுத்துப் பகுதியில் தாக்கியது. பந்து தாக்கியதில் நிலைகுலைந்து போன அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டு பின்னர் மோனாஷ் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைகவசம் அணிந்திருந்த போதிலும், இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக பென் சிக்கிக்கொண்டார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பென் ஆஸ்டின், உயிரிழந்ததாக ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பென் ஆஸ்டின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று, கடந்த 2014ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து, ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அதனால் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

