Thursday, March 19, 2026 11:08 am
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இம் மாதம் 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் போது, சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட தலைவர்களுடன் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இந்த சந்திப்புகள், முக்கிய கடல் போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பது, துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது போன்ற அமெரிக்காவின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.

