Tuesday, December 2, 2025 10:23 am
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொற்றா நோய்களின் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும், வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன.
எலிக்காய்ச்சல் நோயானது ஒரு வகை பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ளநீர், வயல்நீர், சேற்று நிலங்களில் இக்கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில், வயல் நிலங்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலில் உட்செல்கின்றன. இதுவே எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கான காரணங்களாகக் காணப்படுகின்றன.
கடுமையான காய்ச்சல், தசைவலி, தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றன இந்நோய்குரிய அறிகுறிகளாக உள்ளன.
வயல்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக்கொள்ள முடியும் . வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறித்த நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக முதல் இரண்டு நாட்களுக்குள்ளேயே தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கடந்த காலங்களில் தாமதமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதனாலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டன எனவும் பொது மக்கள் அனைவரும் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன் எனவும் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் வயல் நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

