Monday, December 1, 2025 11:05 am
“டித்வா” ( Ditwah ) சூறாவளியின் காற்றழுத்தம் குறைவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இது நலிவடைந்து நாட்டை விட்டு நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி வடக்கு, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் ,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
களுத்துறை தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் மீனவர்களும், கடல்சார் ஊழியர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

