Tuesday, December 9, 2025 1:01 pm
மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி எமக்கு அந்த வேறுபாடு கிடையாது என தமிழக வெற்றிக் கழகத்தித்தின் தலைவர் விஜய் இன்று செவ்வாய்கிழமை புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த விஜய்,
தமிழ்நாடு, புதுச்சேரி வேறுவேறு என பிரித்தாலும் நாம் எல்லாம் வேறு கிடையாது ஒன்று தான். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான். பாச உணர்வு இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
மகாகவி பாரதியார் இருந்த மண்ணும், பாரதிதாசன் பிறந்தமண்ணும் புதுச்சேரி தான். நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர் அவரை இழந்து விடாதீர்கள் என நம்மை எச்சரித்தது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள் எனத் தெரிவித்த விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றியை தெரிவித்தார். வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு பாரபட்சம் காட்டவில்லை. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

