Monday, November 3, 2025 8:59 am
கிளிநொச்சி இராமநாதபுரம் சுடலைக்குளம் பகுதியில் 10 பேரினை விசேட அதிரடி படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் சோதனை நடத்தச் சென்ற நிலையில் விசேட அதிரடி படையினருடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐந்து (05) பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

