பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே. வட்டலியத்த தலைமையில், பிற்பகல் 1 மணியளவில் கூடவுள்ளது.
சம்பள நிர்ணய சபையின் தொழில் அமைச்சின் நியமன உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிட்னண் செல்வராஜா, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும், தொழில் தருநர் சார்பில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மஸ்கெலியா – பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளியான பாலகிருஷ்ணன் தேவிகா மற்றும் செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி ஆகியோரால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு மீதான விசாரணைகளின் பின்னர் செப்டெம்பர் 19ஆம் திகதி நீதிமன்றத்தால் விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய பேச்சுவார்த்தைகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறும், நவம்பர் 20ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழில் ஆணையாளர் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பிட்டவொரு தொகையை அதிகரிக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. எனவே தான் சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், தொழில் அமைச்சரால் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற ஒரு சம்பளத்தை நிர்ணயித்து அதற்கான கொள்கை பிரகடனமொன்றை முன்வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும், நவம்பர் 20ஆம் திகதிக்கு முதல் சம்பள உயர்வை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த காலக்கெடுவுக்குள் சம்பள உயர்வு அறிவிக்கப்படாவிட்டால் ஜனவரி 20ஆம் திகதிக்குள் தம்மை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடிய போது 1350 ரூபா அடிப்படை சம்பளமும், 350 ரூபா உற்பத்தி திறன் கொடுப்பனவையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சம்பள பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
