Monday, December 1, 2025 10:53 am
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொதுப் போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான வீதி,கரையோர வீதி,புத்தளம் வீதி மற்றும் களனிவெளி ஆகிய புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, அலுவலக புகையிரத சேவைகள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கடந்த வாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பொது போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியமை, பாலம் உடைந்தமை உள்ளிட்ட காரணிகளால் பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.
நேற்றைய தினம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைவான மட்டத்தில் பதிவாகியதை தொடர்ந்து பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு புகையிரத வீதி மற்றும் மலையக புகையிரத வீதி மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் அப்பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிப்பது தாமதாகும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து பொலன்னறுவை, மன்னம்பிட்டிய ஆகிய பகுதிகளின் தொடருந்து மார்க்கங்களும் சேதமடைந்துள்ளன. இதனால், வடக்குக்கான தொடருந்து சேவையை ஆரம்பிப்பதிலும், கிழக்குக்கான தொடருந்து சேவையை ஆரம்பிப்பதிலும் தாமதம் ஏற்படும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கரையோர தொடருந்து பாதையில் பாரிய பாதிப்பு ஏற்படாத காரணத்தால் கரையோரத்துக்கான தொடருந்து சேவை வழமையான நேர அட்டவணைக்கு அமைய முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று புத்தளம் வீதியில் கொழும்பு கோட்டை முதல் கொச்சிக்கடை வரை காலை 4 மணி முதல் இரவு 7.10 வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதே போன்று கொச்சிக்கடை முதல் கொழும்பு கோட்டை வரை காலை 6.20 முதல் இரவு 8.20 மணி வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் கொழும்பு கோட்டை முதல் அவிசாவளை வரை காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், அவிசாவளை முதல் கொழும்பு கோட்டை வரை காலை 4.40 மணி முதல் 12.25 வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பிரதான தொடருந்து மார்க்கத்தில் மருதானை முதல் கனேமுல்ல வரை காலை 6 மணி முதல் மாலை 6.40 வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
கனேமுல்ல முதல் கொழும்பு கோட்டை வரை காலை 7.10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
குறித்த தொடருந்து மார்க்கங்கள் சேதமடைந்துள்ளதால் அம்பேபுஸ்ஸ, பொல்கஹவெல, றம்புக்கனை, கண்டி, மாத்தளை, பதுளை, காங்கேசன்துறை, மஹவ, மட்டக்களப்பு, மஹவ திருகோணமலை, மதவாச்சி, மன்னார், கொச்சிக்கடை, புத்தளம் ஆகிய புகையிரத சேவைகள் இடம்பெறாது என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதி, போக்குவரத்துக்காக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

