Friday, December 19, 2025 3:55 pm
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் போராட்டம் வெடித்தது.
கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (18) அன்று உயிரிழந்தார்.
2024 போராட்டத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் தேர்தலுக்கான திகதியை அறிவித்த மறுநாளே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் அத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது மரணச் செய்தி வெளியானதும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் பங்களாதேஷின் பிரதான பத்திரிகைகளான ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) மற்றும் ‘ப்ரோதோம் ஆலோ’ (Prothom Alo) அலுவலகங்களுக்குக் கடுமையான சேதம் விளைவித்ததுடன் ஒரு கட்டிடத்திற்குத் தீயிட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட தாக்குதல் என்றும், தேர்தலை சீர்குலைப்பதே சதிகாரர்களின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கம் நாளை (20) தேசிய துக்க தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

