Monday, December 8, 2025 2:08 pm
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக் வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல், பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது. பின்னர் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படும் இடத்தில் பழைமை வாய்ந்த மரங்கள் அழிக்கப்படுவதாகவும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைக் விதித்தது.
இந்த நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை என்பதை வலியுறுத்தி விளையாட்டு துறைசார்ந்தவர்கள் பேரணியை முன்னெடுத்தனர்.

சென் போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன், இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர்.


