ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிக பட்சமாக 1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில் குவிந்துள்ளன என்றும், இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையின் நோக்கம் சாதாரண மக்களுக்கு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும் என்று கூறுகின்றனர்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 918 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக் காட்டுகின்றது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 249 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.முன்பை விட தற்போது வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
விலை மாற்றங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் Z Play 2025 SUV தற்போது 23.5 மில்லியனுக்கு விற்கப்படுகின்றதாகவும், முன்னர் இது 25.5 மில்லியனாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris) 11.5 மில்லியனிலிருந்து 10.5 மில்லியனாகவும் குறைந்துள்ளது.
“சுசுகி ஆல்டோ ஹைப்ரிட் (Suzuki Alto Hybrid) தற்போது 7.9 மில்லியனிலிருந்து 7.3 மில்லியனாகவும், சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) 7.8 மில்லியனிலிருந்து 7.3 மில்லியனாகவும் குறைந்துள்ளது”, என மெரிஞ்சிகே குறிப்பிட்டார்.
மேலும் டொயோட்டா தற்போது இலங்கையின் இறக்குமதி வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ளது.
சிறிய வாகன பிரிவில் நிசான் (Nissan) பிராண்ட் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளதாகவும், ஆனால் சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) மொடலில் புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படாததால் அதன் விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது ஹோண்டா, வெசல் SUV பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளதாக மெரிஞ்சிகே கூறினார்.