Monday, January 26, 2026 2:32 pm
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்னும் இளைஞன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் குறித்த இளைஞனின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்றுக் கட்டில் அவரது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிணற்றுக்குள் குறித்த இளைஞனுடையதாக கருதப்படும் ஒரு காலணியும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தேடுதல் நடவடிக்கைகளும் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

