Thursday, November 13, 2025 10:25 pm
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் T20 முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி இறுதிப் போட்டி உட்பட ஏழு T20 போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் தொடக்க ஆட்டம் நவம்பர் 18ம் திகதி பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே இடையே நடைபெறும்.

மேலும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட அட்டவணையில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு, 27 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த புதிய அட்டவணைகள் வெளிவந்தன.

