Monday, December 15, 2025 4:29 pm
இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு , வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து ஒரு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீதிச் சேதங்கள் ,வீதி மூடல்கள் , வீதி விபத்துகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான வீதி சேதங்கள் மற்றும் மூடல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது என்றும் , சாதாரண நிலைமைகளிலும் இது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த அமைப்பு பொதுமக்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது.
வீதி மூடல்கள் , சேதமடைந்த வீதிகள் அல்லது விபத்துகளைக் காணும் வீதிப் பயனர்கள் https://road-lk.org/report என்ற இணையதளம் மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை தமிழ் ,சிங்களம் ,அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம். மேலும் முடிந்தால் புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் , புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்த்து , அதன் பின்னரே பாதிக்கப்பட்ட இடத்தைத் தேசிய வீதி வரைபடத்தில் குறிப்பார்கள். இந்த அமைப்பை இற்றைப்படுத்தும் அதிகாரம் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண வீதி வலையமைப்பிற்காக இந்த அமைப்பு முழுமையாக நிறுவப்பட்ட பின்னர் , கிராமப்புற வீதிகளையும் இதில் இணைப்பதற்கான திட்டங்கள் உள்ளன.
இந்தத் தளம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) பல வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது , அதன் பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மற்றும் மாகாண வீதிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க மக்கள் சுறுசுறுப்பாக செயற்படுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

